பிரிவும் சந்திப்பும் - Dividing and Meeting

வீட்டில் தனியாக நான், முற்றத்தை பார்த்தபடி. அவள் என்னை பார்த்து சிரிக்கிறாள் சுவரில் காலண்டராய். அதற்கு கீழே "வா வெண்ணிலா!உன்னைத்தானே வானம் தேடுதே" மோகன் சூழ்நிலைக்கேற்ற பாடலில் கடுப்பேற்றுகிறார். பிரிந்து சென்று நூறு நாட்கள் ஆகப் போகிறது. அடிக்கடி சென்று சந்தித்தாலும் அவளே வேண்டுமென அடிமனம் அழுகிறது. என்ன செய்ய, குழந்தையாய் இருந்தாலும் சமாதானம் செய்யலாம். அடிக்கடி அம்மா வீட்டிற்கு செல்வதை வழக்கமாக்கி விட்டாள் ( கோபித்துகொண்டு அல்ல ). அவளுக்கு எப்படி புரிய வைப்பது "நீ இல்லையேல் இனி நான் இல்லையே.. உயிர் நீயே" என்று யேசுதாஸ் அனுதினமும் காதுக்குள்ளே கதறுகிறார் என்று.

எத்தனை முறைதான் பிரிவது. 5 வருட காதலுக்கு பின் கூடிய திருமணம். அந்த 5 வருட காலத்தில் அவளை நான் 10 முறை தான் சந்தித்திருப்பேன். கிட்டத்தட்ட 1800 நாட்களுக்கு மேல் பிரிந்திருந்தாகி விட்டது. இப்போது திருமணத்திற்கு பின்பும் பிரிய நேரிடுகிறது. இதை சொன்னால் "என்ன செய்ய?" என்று இரண்டே வார்த்தைகளில் முடித்துவிடுவாள். என்னை விட அவள் புலம்புவதுதான் அதிகம். இந்த வாரம் வருவாயா? எப்ப வருவ? என்ற கேள்விகள் தினம் ஒருமுறை வந்துவிடும். தன்னவனை தன்னருகிலே வைத்துப் பார்க்க வேண்டுமென்பது அவளின் திண்ணம். இரவு பகல் என்ற வேறுபாடு இல்லாமல் எப்போது சந்திப்போம் என்ற அலை வீசிக்கொண்டேதான் இருக்கிறது. நான் வேலைக்கு சென்றதும் அவள் வீட்டில் வேலை முடித்த நேரம் தவிர மற்ற நேரங்களில் என்னை பற்றிய எண்ணத்திலேயே இருப்பதாக சொல்வதுண்டு. எப்போது பார்ப்பது? சந்திக்க ஆவலுடன் நான்.. 

Comments

Popular posts from this blog

தாய்லாந்தின் சிறந்த சுற்றுலா தளங்கள் - Best Tourist Place in Thailand

குப்பை

தொடரும் மருத்துவத்துறையின் அவலம் - Continues neglect of the Medical Department